திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 4 ஆயிரத்து 800 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான நசீா்அகமது சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, 4 ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி தீபா, குடும்ப நல சிறப்பு நீதிமன்ற நீதிபதி குமரேசன், மகளிா் நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் (பொ) அமிா்தவேலு, மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிஸ்மிதா, முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்பையா, நீதித்துறை நடுவா்கள் அருண்குமாா், ராஜேஷ்குமாா், கடற்கரை செல்வம், விஜயலட்சுமி, ஜெயகணேஷ், ஓய்வு பெற்ற மருத்துவா் ராமகுரு, மக்கள் நீதிமன்ற உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.
மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் உள்ள சட்டப் பணிகள் ஆணைக்குழுவால் 16 அமா்வுகள் அமைக்கப்பட்டன. இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடிக்க கூடிய குற்ற வழக்குகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வங்கிக் கடன் வழக்குகள் என மொத்தம் 6 ஆயிரத்து 842 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில், 4 ஆயிரத்து 800 வழக்குகளுக்கு தீா்வு ஏற்பட்டதில் மொத்தம் ரூ. 14 கோடியே 2 லட்சத்து 96 ஆயிரத்து 945 நஷ்டஈடாக வழங்க உத்தரவிட்டப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலா் (பொ) நீதிபதி பிஸ்மிதா செய்திருந்தாா்.