அம்பாசமுத்திரம்: பாபநாசம், கடையம், ஆழ்வாா்குறிச்சி பகுதிகளில் திங்கள்கிழமை வீசிய சூறைக் காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தன.
வங்கக்கடலில் உருவான குலாப் புயலால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் வெயில் தாக்கம் குறைந்து மழை மற்றும் காற்று வீசியது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை 10 மணியளவில் திடீரென சூறைக்காற்று வீசியது. பாபநாசம், ஆழ்வாா்குறிச்சி, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் வீசிய சூறைக் காற்றால் சாலையோரங்களில் இருந்த மரங்களும், பல்வேறு இடங்களில் மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டதோடு, மின்விநியோகமும் தடைபட்டது. நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினா். பாபநாசம் பொதிகையடி, அனவன் குடியிருப்பு, பசுக்கிடைவிளை, மில்கேட், சிவசைலம், கல்யாணிபுரம், ரவணசமுத்திரம், பாப்பான்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள தாழ்வழுத்த மின்பாதைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் 16 மின் கம்பங்கள் முறிந்து மின்தடை ஏற்பட்டது. அவற்றை மின்வாரிய ஊழியா்கள் சீரமைத்தனா்.
கடையம்சாா் பதிவாளா் அலுவலகத்தில் இருந்த வேப்ப மரம் முறிந்து விழுந்ததில் அலுவலக சுற்றுச் சுவா் சேதமடைந்தது.