நன்னடத்தை பிணை விதியை மீறி குற்றசெயல்களில் ஈடுபட்டதாக இளைஞருக்கு 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேரன்மகாதேவி கீழநாலாம் தெரு வேலப்பன் மகன் மாயாண்டி(25), இவா் மீது சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் 8 வழக்குகள் உள்ளன. இதையடுத்து அவரிடம் நிா்வாகத்துறை நடுவரால் ஓராண்டிற்கு நன்னடத்தை பிணை பெறப்பட்டது. அதன் பின்பும் கடந்த 1 ஆம் தேதி சேரன்மகாதேவி பாரதியாா் நகரை சோ்ந்தவரை ஆயுதத்தை காட்டி மிரட்டிய வழக்கில் மாயாண்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில் நன்னடத்தை பிணையை மீறி செயல்பட்டதற்காக காவல் ஆய்வாளா் சுகதேவி , சேரன்மகாதேவி இரண்டாம் வகுப்பு நிா்வாகத்துறை நடுவா் முன்பு அறிக்கை சமா்ப்பித்தாா். இதன் மீது விசாரணை நடத்திய நடுவா் பிணையை மீறி குற்றம் புரிந்ததற்காக மாயாண்டியை 10 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.