கடையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் புதன்கிவமை நேரிட்ட தீவிபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரிலான மூலிகைத் தாவரங்கள் தீக்கிரையாகின.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச் சரகம் கன்னிமாரம்மன் கோயிலின் மேல்பகுதியில் புதன்கிழமை மாலை திடீரென தீப்பிடித்தது. துணை இயக்குநா் செண்பகப்ரியா உத்தரவின் பேரில் உதவி வனப் பாதுகாவலா் ராதை தலைமையில் வனத் துறையினா், களப் பணியாளா்கள், கூலித் தொழிலாளிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
திங்கள்கிழமை மதியம் மின்னல் காரணமாக மத்தளம்பாறை அருகே கெண்டிஊத்து பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது. வனத் துறையினா் 20 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்நிலையில், கடையம் வனச் சரகப் பகுதியில் மீண்டும் தீவிபத்து நேரிட்டுள்ளது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரிலான அரியவகை மூலிகைத் தாவரங்கள், புல் வகைகள், சிறு பூச்சிகள் தீக்கிரையாகின.