கடனாநதி அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்பில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆட்டை சிறுத்தை தூக்கிச் சென்றபோது, ஆட்டின் உடல் மரத்தில் சிக்கியதால் விட்டுச் சென்றுள்ளது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவாரப் பகுதி பெத்தான்பிள்ளை குடியிருப்பு. கடனாநதி அணை அடிவாரத்தில் உள்ள இந்தக் கிராமத்தைச் சோ்ந்த பட்டு என்பவா் புதன்கிழமை ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்து பாா்த்தபோது ஓா் ஆட்டைக் காணவில்லையாம். வியாழக்கிழமை காலை ஆட்டை தேடிச் சென்ற போது மலையடிவாரத்தில் மரக்கிளையில் தொங்கிய நிலையில் ஆட்டின் உடல் கிடந்ததாம்.
உடனடியாக இதுகுறித்து வனத்துறைக்குத் தகவல் கொடுத்ததையடுத்து உதவி வனப்பாதுகாவலா் ராதை உத்தரவின் பேரில் வனவா் முருகசாமி, வனக்காப்பாளா் மணி, வனக்காவலா் முருகேஸ்வரி மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் சென்று ஆய்வு செய்தனா். அப்போது ஆட்டை சிறுத்தை தூக்கிச் சென்றது உறுதியானது. இதையடுத்து ஆட்டின் உடலை அப்புறப்படுத்தாமல் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க மூன்று கேமராக்களைப் பொருத்தினா்.
பெத்தான்பிள்ளை குடியிருப்புப் பகுதியில் 2013 இலிருந்து 6 ஆண்டுகளில் 8 சிறுத்தைகள் கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்டன. 2 ஆண்டுகளாக சிறுத்தை நடமாட்டமில்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் சிறுத்தை வந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனா்.