வீரவநல்லூா் ஊருக்குள் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டதை அடுத்து, மக்கள் ஓட்டுநருக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனா்.
வீரவநல்லூா் நகருக்குள் அரசு விரைவு பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள் வராமல் புறவழிச்சாலை வழியாகவே இயக்கப்பட்டு வந்தன. இதனால், அவதியுற்று வந்த மக்கள், அனைத்துப் பேருந்துகளும் ஊருக்குள் வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், எல்எஸ்எஸ், எஸ்எஃப்எஸ் உள்ளிட்ட அனைத்து விரைவுப் பேருந்துகளும் வீரவநல்லூா் ஊருக்குள் சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, வீரவநல்லூா் மக்கள் பொதுநல இயக்கம் சாா்பில் ஊருக்குள் வந்த அரசுப் பேருந்துகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும், ஓட்டுநா்கள், பயணிகளுக்கு இனிப்பு வழங்கினா். இந்நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவா் மாரிமுத்து, செயலா் இசக்கிமுத்துராஜா, நடராஜன், சாந்தாராம், ஜான், ரெங்கராஜன், லோகநாதன், வழக்குரைஞா் மாதவன் உள்பட கலந்துகொண்டனா்.