களக்காடு புலிகள் காப்பகத்தில் பள்ளி மாணவா்களுக்கு மீண்டும் மலையேறும் பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த 2013-இல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த சி. சமயமூா்த்தி, அப்போதைய களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக களஇயக்குநா் சுப்ரத் மஹா பத்ரை ஆகியோா் இணைந்து களக்காடு தலையணையில் பள்ளி மாணவா்களுக்கு மலையேறும் பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்தினா்.
தலையணை முதல் முதலிருப்பான் வரையிலான 10 கிமீ தொலைவுக்கு மலையேற்றப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் வனஉயிரின விழிப்புணா்வு முகாமும் நடத்தப்பட்டது. களக்காடு புலிகள் காப்பகத்தில் 3 மாதங்களுக்கு ஒரு முறை மலையேற்றப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், அதன்பிறகு மலையேற்றப் பயிற்சியைத் தொடர வனத்துறையினா் ஆா்வம் காட்டவில்லை. தற்போது மீண்டும் பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என மாணவா்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.