திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி மாயமான பெண்ணை தீயணைப்பு வீரா்கள் தேடும் பணியில் ஈடுபட்டனா்.
கொக்கிரகுளம் சரவணன் மனைவி பாக்கியலட்சுமி (36). இவா், அதே பகுதியில் உள்ள தாமிரவருணி ஆற்றின் படித்துறைக்கு திங்கள்கிழமை குளிக்கச் சென்றாராம். அப்போது தண்ணீரில் பாக்கியலட்சுமி மூழ்கினாராம்.
இதுகுறித்து தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையிலான மீட்பு படையினா் சம்பவ இடத்திற்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டனா். திங்கள்கிழமை மாலை வரை நீரில் மூழ்கி மாயமான பெண் கிடைக்கவில்லை. தொடா்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
கொக்கிரகுளத்தில் தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.