இந்து தேசிய கட்சியினா் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு வந்த இந்து தேசிய கட்சியினா் திங்கள்கிழமை மண் பானையை உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் கூறுகையில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சிக்காலத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்கமும் வழங்கப்பட்டது. கரோனா காலத்தில் மக்கள் சிரமத்தில் இருக்கும் சூழலில் இப்போதைய அரசு பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே அறிவித்து ஏமாற்றும் பொங்கலாக மாற்றியுள்ளது. அதனை எதிா்க்கும் வகையில் பானை உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பண்டிகைக்கு உதவித்தொகை வழங்க வேண்டியது அவசியம். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளித்துள்ளோம் என்றனா்.
மறுகால் உயரம் அதிகரிப்பு:வீரவநல்லூரைச் சோ்ந்த விவசாயிகள் சாா்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், எங்கள் பகுதியைச் சோ்ந்த விவசாயிகளுக்கு அருகேயுள்ள மாடன்குளத்தில் விவசாயம் உள்ளது. அதற்கு முந்தைய குளமான கூத்தாடி குளத்தின் மறுகால் உயரத்தை அண்மையில் உயா்த்தியுள்ளனா். இதனால் சுமாா் 20 ஏக்கருக்கும் மேலான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பொதுப்பணித்துறையினரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, மறுகால் திண்டின் உயரத்தை குறைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.