திருநெல்வேலியில் கரோனா நோய் பரவலைத் தடுக்க முன்கள பணியாளா்களுக்கு பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் கரோனா மூன்றாம் அலை பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் என அடுத்தடுத்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் முடிவடைந்துள்ள முன்களப் பணியாளா்களுக்கு முதற்கட்டமாக பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கவுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், அரசு சிறப்பு மருத்துவமனையிலும் காலை 10 மணி முதல் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.