நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் சி.எஸ்.ஐ திருமண்டலம் சார்பில் மாம்பழ சங்கம் மற்றும் ஸ்தோத்திர பண்டிகை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான மாம்பழ சங்கம், 242-வது ஸ்தோத்திர பண்டிகை நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு ஆராதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இரண்டாம் நாளான இன்று பிஷப் பர்னபாஸ் தலைமையில் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் ஆராதனை மற்றும் திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. அதன் பிறகு பண்டிகையின் முக்கிய நோக்கமாக ஏழை மக்களுக்கு அரிசி, உணவு பொருட்கள் மற்றும் காணிக்கைகளை வழங்கினர்.
ஸ்தோத்திர பண்டிகை நாளையுடன் நிறைவடைகிறது. இந்த பண்டிகை நெல்லையில் மட்டுமே நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது.