களக்காடு அருகே மேலக்கருவேலன்குளத்தில் உள்ள அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை செளந்திரபாண்டீஸ்வரா் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, இக்கோயிலில் சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்றுவந்தன. இதையடுத்து, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 6ஆம் தேதி தொடங்கி, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 4ஆம் நாளான வியாழக்கிழமை அதிகாலை 6ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதையடுத்து, கோயிலில் உள்ள 3 கோபுரக் கலசங்களுக்கும் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, செளந்திரபாண்டீஸ்வரா், கோமதி அம்பாள், ஆனந்தநடராஜா், சிவகாமி அம்பாள், பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனம், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.