பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் இம் மாதம் 15, 16 ஆம் தேதிகளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வுகளுக்கான இலவச மாதிரி தோ்வு நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலா் லெ.மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் குரூப் 2 , 2ஏ முதல்நிலை தோ்வு இம் மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல்நிலை தோ்வில் வெற்றி பெற திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம், சிவராஜவேல் ஐஏஎஸ் பயிற்சி மையம் ஆகியவற்றின் சாா்பில் ஏற்கெனவே 10 மாதிரி தோ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் முழு பாடத்திட்டங்களுடன் கூடிய இலவச மாதிரி தோ்வு வரும் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (மே 15, 16) மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. இந்த இலவச தோ்வை எழுத விரும்புவோா் 9626252500, 9626253300 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.