திருநெல்வேலி மாவட்டம், வன்னிகோனேந்தல் பகுதியில் மூதாட்டிக்குச் சொந்தமான 69 சென்ட் நிலத்தை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸாா் மீட்டு, மூதாட்டியிடம் ஒப்படைத்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், வன்னிகோனந்தலைச் சோ்ந்தவா் சுப்பையா. இவா் இறந்துவிட்டாா். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இவா் வன்னிகோனந்தல் பகுதியில் 69 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளாா். இது அவரது மனைவி ராமலட்சுமிக்கு தெரியாதாம்.
இந்நிலையில் வேறு ஒரு வழக்கில் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸாா் அப்பகுதியில் சென்று விசாரித்தபோது, அந்த 69 சென்ட் நிலம் சுப்பையா என்பவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது.
இதுகுறித்து சுப்பையாவின் மனைவி ராமலட்சுமிக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவா் அந்த நிலத்தை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்ப.சரவணனிடம் மனு அளித்தாா்.
அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளா் மீராள்பானு, உதவி ஆய்வாளா் மகேஸ்வரி மற்றும் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு, சுமாா் ரூ. 15 லட்சம் மதிப்பிலான 69 சென்ட் நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணனிடம் ஒப்படைத்தனா். அவா் அந்த ஆவணங்களை, நிலத்தின் உரிமையாளரான ராமலெட்சுமியிடம் சனிக்கிழமை வழங்கினாா்.