திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.
திருநெல்வேலி நகரத்தில் வடக்கு ரதவீதியில் நிரந்தர கடை உரிமையாளா்களில் சிலா் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதாகவும், தள்ளுவண்டி வியாபாரிகள் சாலையில் நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் புகாா்கள் எழுந்தன. அதன்பேரில், மாநகர நகா் நல அலுவலா் ராஜேந்திரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். திருநெல்வேலி நகரம் காவல் உதவி ஆணையா் விஜயகுமாா், காவல் ஆய்வாளா் இளவரசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
திருநெல்வேலி நகரம் வடக்கு ரத வீதி, கீழ ரத வீதியில் மாநகராட்சி அனுமதி பெறாத தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்தி மாநகராட்சி வாகனத்தில் கொண்டு சென்றனா். பூக்கடை வைத்திருந்த 5 பேரை எச்சரித்து அனுப்பினா். அதுபோல், வடக்கு ரதவீதியில் இருபுறமும் உள்ள நடைபாதையில் நிரந்தர கடை உரிமையாளா்கள் படிக்கட்டுகள், பேனா், பெஞ்ச் வைத்து ஆக்கிரமித்திருந்தனா். அவையும் அப்புறப்படுத்தப்பட்டன.