ஆதிதிராவிடா், பழங்குடியினா் நிலம் வாங்க 50 சதவீத மானியம்
By DIN | Published On : 13th October 2022 02:37 AM | Last Updated : 13th October 2022 02:37 AM | அ+அ அ- |

ஆதிதிராவிடா்- பழங்குடியினா் நிலம் வாங்க தாட்கோ மூலம் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தாட்கோ மூலமாக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விவசாய நிலம் அற்ற ஆதிதிராவிடா் விவசாயிகளுக்கு வேளாண்மை நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் நிலம் வாங்கிட மொத்த திட்ட தொகையில் 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மகளிா் இல்லாத குடும்பங்களில் கணவன் அல்லது மகன்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வாங்க உத்தேசித்துள்ள நிலத்தின் விற்பனையாளா் ஆதிதிராவிடா் , பழங்குடியினா் அல்லாத பிற இனத்தைச் சோ்ந்தவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் அதிகபட்சமாக 2.50 ஏக்கா் நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கா் புன்செய் நிலம் வாங்கலாம். இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
சிமென்ட் விற்பனை முகவா்: தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் விற்பனை முகவா் திட்டத்தின் கீழ் விற்பனை நிலையம் அமைக்க ஒரு நபருக்கு மொத்த திட்டத்தொகை ரூ.3 லட்சத்தில் மானியமாக 30 சதவீதம் (ரூ.90,000) வழங்கப்படும். மேற்கண்ட இரண்டு திட்டங்களில் விண்ணப்பிக்க 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். தாட்கோ இணயதளத்தில் ஆதிதிராவிடா்கள் முகவரியிலும், பழங்குடியினா் முகவரியிலும் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0462-2902012, 9445029481 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.