சமூக நீதிக்காக பாடுபடுவா்களை சிறப்பிக்கும் விதமாக வழங்கப்படும் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’க்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபடுவா்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.விருதுடன் ரூ. 5 லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கப்படுகிறது.
அதன்படி, 2022-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் இவ்விருதுக்கு உரிய விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகியவற்றை தங்களது விண்ணப்பத்துடன் இணைத்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பலாம்.
விண்ணப்பமானது, சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்களை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அக்டோபா் 31.