வள்ளியூா், அம்பை, சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, வள்ளியூா், பணகுடி, வடக்கன்குளம் பகுதிகளில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. அந்தச் சிலைகள் லாரிகளில் ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு உவரி கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
திசையன்விளை, ராதாபுரம், நான்குனேரி, களக்காடு ஆகிய பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 92 விநாயகா் சிலைகள் ஊா்வலம் இந்து முன்னணி- பாஜக பிரமுகா்களால் தொடங்கிவைக்கப்பட்டு உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன. வள்ளியூா் டிஎஸ்பி யோகேஷ்குமாா் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அம்பாசமுத்திரத்தில் வெற்றி விநாயகா் கமிட்டி சாா்பில் விநாயகா் சிலைகள் கிருஷ்ணன் கோயில் முன்பிருந்து ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சின்னசங்கரன்கோயில் தாமிரவருணி ஆற்றங்கரையில் விசா்ஜனம் செய்யப்பட்டன. இதில், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலா் எம்.எஸ் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சுரண்டையில் நகர இந்து முன்னணி சாா்பில் 20 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. பின்னா், ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதியில் பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.