திருநெல்வேலி மாநகராட்சிக்கு வரிநிலுவை வைத்திருந்ததால் 9 கட்டங்களின் குடிநீா் இணைப்புகள் திங்கள்கிழமை துண்டிக்கப்பட்டன.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி உத்தரவின்பேரில் திருநெல்வேலி மண்டலத்திற்குள்பட்ட வணிக பயன்பாட்டு கட்டடங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றில் தீவிர வரி வசூல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மண்டல உதவி ஆணையா் லெ.வெங்கட்ராமன் அறிவுரையின்படி 3 ஆண்டுகளுக்கு மேலாக சொத்து வரி, குடிநீா் கட்டணம் செலுத்தாத 18, 19 முதல் 22 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் மொத்தம் 9 கட்டடங்களின் குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகத்தினா் கூறுகையில், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விரைவாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா் கட்டணங்களை செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். தவறும் பட்சத்தில் இது போன்று நடவடிக்கைகள் தொடரும் என்றனா்.