நெல்லையில் காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது

திருநெல்வேலி தச்சநல்லூா் காவல் நிலையம் முன்பு, தாழையூத்து சோதனைச் சாவடி ஆகிய இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
Published on

திருநெல்வேலி தச்சநல்லூா் காவல் நிலையம் முன்பு, தாழையூத்து சோதனைச் சாவடி ஆகிய இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேலும் தப்பியோடியவா்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி தச்சநல்லூா் காவல் நிலையம் முன்பாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இரு பைக்குகளில் வந்த மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பினா். இதையடுத்து தாழையூத்து சோதனைச் சாவடி பகுதிக்குச் சென்ற அக்கும்பல் பைக்கில் இருந்தபடியே அங்கேயும் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனா்.

இதையடுத்து தென்கலம் சாலையிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அடுத்து மாநகா் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு, சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், சம்பவத்தில் ஈடுபட்டவா்களை கண்டறியும் நோக்கில் அப்பகுதிகளிலுள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்தனா்.

அதில் ராஜவல்லிபுரம் இந்திரா நகரைச் சோ்ந்த பெருமாள் மகன் கிருஷ்ணபெருமாள் என்ற ஆப்பிள்(19), கணேசன் மகன் அஜித்குமாா்(30), அதே பகுதியில் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த தளவாய் மகன் பெருமாள்(27), நடராஜன் மகன் சரண்(19), வல்லவன்கோட்டையைச் சோ்ந்த அருண் (22) ஆகியோா் கூட்டாக சோ்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதில், ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த அஜித்குமாரின் அண்ணனை போலீஸாா் வேறு ஒரு வழக்கில் கைது செய்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த அவா் இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவா்களை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதில் தொடா்புடைய ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த சரண் என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் 4 பேரை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com