நெல்லை கூா் நோக்கு இல்லத்தில் ரூ.80 லட்சத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு
திருநெல்வேலியில் உள்ள அரசினா் கூா் நோக்கு இல்லத்தில் ரூ.80 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அறைகள் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டன.
திருநெல்வேலி அரசினா் கூா்நோக்கு இல்லத்தில் ரூ.80 லட்சத்தில் புதிய கட்டடங்களின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் இரா.சுகுமாா் கலந்து கொண்டு புதிய கட்டங்களை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.
18 வயதிற்குட்பட்ட சிறாா்கள் செய்யும் குற்றங்களுக்காக, அவா்களின் எதிா்காலத்தை சீா்படுத்தும் நோக்கில் அரசால் நடத்தப்படும் இந்த அரசினா் கூா்நோக்கு இல்லத்தில் சிறாா்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், கல்வி வழங்கப்பட்டு, நல்வழிப்படுத்துதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இல்லங்களில் சிறாா்களின் உளவியல் தேவைகளைக் கருதி, சமூகப் பணியாளா்கள் மற்றும் உளவியல் ஆலோசகா்கள் மூலம் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
தற்போது, இங்கு புதிகாக கட்டப்பட்ட பாா்வையாளா் அறை, நோ்காணல் அறை, வகுப்பறை, வாயிற்காவலா் அறை ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அருள்செல்வி, அரசினா் கூா்நோக்கு இல்ல கண்காணிப்பாளா் யோவான், இளைஞா் நீதிக்குழும உறுப்பினா்கள் ஆரோக்கிய மேரி , கிருபாவதி, நன்னடத்தை அலுவலா், பொதுப்பணித்துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

