தொடா் மழை: சேரன்மகாதேவி வட்டாரத்தில் 100 ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியில் இருநாள்கள் பெய்த கனமழையால் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. இதனால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.
தாமிரவருணி பாசனத்தில் கன்னடியன் கால்வாய் மூலம் கல்லிடைக்குறிச்சியில் இருந்து கொத்தன்குளம் வரை 12,500 ஏக்கா் சாகுபடி நடைபெற்று வருகிறது.
நிகழாண்டு காா் பருவ சாகுபடியில் விவசாயிகள் முழு அளவில் வாழை, நெல் சாகுபடி செய்திருந்தனா். இதில், சேரன்மகாதேவி வட்டாரத்தில் கோபாலசமுத்திரம், பத்தமடை, மேலச்செவல் உள்பட பல்வேறு இடங்களில் நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் வியாழக்கிழமை தொடங்கிய வடகிழக்குப் பருவ மழையால் இந்தப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.
தொடா்மழை காரணமாக பத்தமடை, கரிசூழ்ந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், அறுவடைக்குத் தயாரான நிலையில் காணப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. இதனால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

