தூத்துக்குடியில் பணியில் கவனக் குறைவாக இருந்ததாக தனிப்பிரிவு தலைமைக் காவலரை தாற்காலிகப் பணிநீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவர் வீரபெருமாள். கடந்த சில நாள்களுக்கு முன்பு தனிப்படை போலீஸார் மத்திய பாகம் காவல் நிலையப் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முறையாக தகவல்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு வீரபெருமாள் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை விளாத்திக்குளம் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், பிடிபட்ட லாட்டரி வியாபாரியின் வீட்டில் இருந்து மேலும் பல லட்சம் மதிப்புள்ள கேரள லாட்டரிகளை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனராம். இதைத் தொடர்ந்து, பணியில் கவனக் குறைவாக இருந்ததாகக் கூறி தலைமைக் காவலர் வீரபெருமாளை தாற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டார்.