வீட்டுமனை வரைமுறைப்படுத்தும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஆட்சியர்

வீட்டுமனை வரைமுறைப்படுத்தும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார்.
Updated on
1 min read

வீட்டுமனை வரைமுறைப்படுத்தும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் மற்றும் உள்பிரிவு வரைமுறைப்படுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் கே. ராஜாமணி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: தமிழ்நாடு அரசு நகர் ஊரமைப்புத் துறை தொழில்நுட்ப அனுமதியின்றி அபிவிருத்தி செய்யப்பட்ட மனைப்பிரிவுகள் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளாகும். அங்கீகரிக்கப்படாத மனைகளின் பத்திரப்பதிவுக்கு தடையேற்பட்டுள்ள நிலையில், மனைகளை வரன்முறைப்படுத்திட ஏதுவாக தமிழ்நாடு அரசு புதிதாக வழிகாட்டுதல்கள் அளித்து அரசாணை மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையின்படி 20.10.2016-க்கு முன்னர் பத்திர பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனை மற்றும் மனைப்பிரிவுகளை மட்டும் முறைப்படுத்திட அரசினால் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அனுமதியற்ற மனைப்பிரிவு அபிவிருத்தி செய்தவர்கள் மற்றும் மனைப்பிரிவு மனைகளை கிரையம் பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசாணையின்படி உடனடியாக தங்களது மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரைமுறைப்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கான உரிய கட்டணம் செலுத்தி முறைப்படுத்திட ஏதுவாக உள்ளாட்சி அமைப்புகளை தொடர்பு கொண்டு அனுமதியற்ற மனை மற்றும் மனைப்பிரிவு விவரங்களை அளித்திட வேண்டும். உள்ளாட்சிகளால் கோரப்படும் ஆவணங்களை உடனடியாக அளித்து வரன்முறை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
20.10.2016-க்கு முன்னர் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது பதிவு செய்து விற்பனை செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அரசாணையில் கண்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுகள் வரன்முறைப்படுத்தப்படும்.
அரசாணையின்படி வரன்முறைப்படுத்தப்படாத மனைகளில் ஏற்கெனவே கட்டடம் கட்டப்பட்டிருப்பினும் அம்மனைகளுக்கும் வரன்முறைப்படுத்துதல் உத்தரவு பெறப்பட  வேண்டும். மறுவிற்பனைக்கான பத்திரப்பதிவுக்கு வரன்முறை உத்தரவு கட்டாயமானதாகும்.
வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு கட்டட அனுமதி, குடிநீர்வசதி, மின்வசதி, கழிவுநீர் வசதி ஆகியன இனி வருங்காலங்களில் உள்ளாட்சிகளால் அளிக்கப்பட மாட்டாது.  வரன்முறைப்படுத்தப்படாத மனைகளை பத்திர பதிவு செய்து மறுவிற்பனை செய்வதற்கும் வழிவகை இல்லை.
எனவே, அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு மனைகளை பத்திரப்பதிவு செய்திடவும், விற்பனை செய்திடவும் ஏதுவாக வரன்முறைப்படுத்திட அரசால் அளிக்கப்பட்டுள்ள இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் பயனடையலாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com