நடைப்பயணத்தில் ஈடுபட முயற்சி: விவசாயிகள் சங்கத்தினர் 29 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி - திருச்செந்தூர் வரை நீதி கேட்டு நடைப்பயணத்தில் ஈடுபட முயன்ற தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத்
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி - திருச்செந்தூர் வரை நீதி கேட்டு நடைப்பயணத்தில் ஈடுபட முயன்ற தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி உள்பட 29 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்கவேண்டும். விவசாயிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டதை தமிழக அரசு உடனே நிறைவேற்றவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பிருந்து திருச்செந்தூருக்கு நீதி கேட்டு நடைபயணம் மேற்கொள்ள தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமையில், தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் திரளானோர் கோவில்பட்டி பயணியர் விடுதி முன் வியாழக்கிழமை திரண்டனர்.  
மறைந்த விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், இன்றைய சூழ்நிலையில் விவசாயிகளின் நிலையை மேம்படுத்த வேண்டி ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று, நடைப்பயணம் மேற்கொண்டு திருச்செந்தூர் முருகனிடம் மனு கொடுக்கும் வேண்டுதல் தொடர்பாக கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர்.
பின்னர், பயணியர் விடுதி முன்பிருந்து திருச்செந்தூருக்கு நடைப்பயணத்தை தொடங்கினர். இதில்,  தூத்துக்குடி மாவட்ட தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜெயகண்ணன், விருதுநகர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் மாரிசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், மாநில அமைப்பாளர் காளிராஜ் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.
நடைபயணத்தில் ஈடுபட்ட விவசாயிகளை, இளையரசனேந்தல் சாலை சந்திப்பில் காவல் ஆய்வாளர் பவுல்ராஜ் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தி 3 பெண்கள் உள்பட 29 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com