தூத்துக்குடியில் காரில் கடத்த முயன்ற 102 கிலோ கஞ்சாவை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி போதைப்பொருள் கடத்தல் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், சிப்காட் புறவழிச்சாலையில் உள்ள பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற ஆந்திரப் பதிவு எண் கொண்ட வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீஸார் சோதனையிட்டனர்.
சோதனையின்போது, கா ரில் 102 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், கஞ்சா கடத்தியதாக தேனி மாவட்டம் ராஜாதோட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் (39), சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள செட்டியபட்டியைச் சேர்ந்த லோகநாதன் (37) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.