தூத்துக்குடி காயல்பட்டினம் கொம்புதுறை பகுதியைச் சேர்ந்த மீனவப் பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: கொம்புத்துறை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் உள்ளன. எங்கள் கிராமத்தில் இயங்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிலர் இப்பள்ளியை மூடுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதை தடுக்க முயற்சிப்பதால் ஆத்தூர் காவல் நிலையத்தில் சிலர் மீது பொய் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டக்குழுவினர் கலைந்து சென்றனர்.