சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் ஆறுமுகனேரியில் தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் "தூய்மை நிகழ்வுகள் 2018'' என்று சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செப். 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடத்த அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் மற்றும் சாரணர், சாரணீய மாணவர்கள், கருணா சங்க மாணவர்கள், செஞ்சிலுவை சங்க மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. ஆறுமுகனேரி மெயின் பஜாரில் தொடங்கிய இப் பேரணியை காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் தொடங்கிவைத்தார். பள்ளி முதல்வர் சண்முகானந்தன் தலைமை வகித்தார். இந்த பேரணி மூலக்கரை ரோடு, பூவரசூர், காந்திதெரு வழியாக வடக்கு பஜாரில் நிறைவடைந்தது. இதில் கலந்துகொண்ட மாணவர், மாணவிகள் மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பதாகைகளை ஏந்திய வண்ணம் சென்றனர்.