தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே பைக்கில் சென்ற டாஸ்மாக் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளரை வழிமறித்து தாக்கி அவர்களிடமிருந்த ரொக்கப்பணம், பைக் மற்றும் செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆத்திக்கிணறு கீழத் தெருவைச் சேர்ந்தவர் கடற்கரை மகன் இசக்கிமுத்து(46). கயத்தாறையடுத்த அய்யனாரூத்து கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வரும் இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு விற்பனை பணத்துடன், பைக்கில் ஊருக்கு திரும்பினார். இவருடன் கடை விற்பனையாளரான குமாரகிரி கீழத் தெருவைச் சேர்ந்த தங்கவேல் மகன் சுப்புராஜ்(42) மற்றொரு பைக்கில் உடன் சென்றாராம்.
அய்யனாரூத்து - கயத்தாறு பிரதான சாலை அரசு காற்றாலை அருகே சென்று கொண்டிருந்த போது இவர்களைப் பின்தொடர்ந்து ஒரே பைக்கில் வந்த 3 பேர் இருவர்களை வழி மறித்து, தாக்கி இசக்கிமுத்து வைத்திருந்த ரூ.98,470 ரொக்கப்பணம் மற்றும் அவருடைய செல்லிடப்பேசி, பைக், சுப்புராஜிடமிருந்த செல்லிடப்பேசி மற்றும் அவரது பைக் ஆகியவற்றை பறித்துவிட்டு, தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து இசக்கிமுத்து அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.