மதுபோதையில் தகராறு செய்த இளைஞர் கொலை: தாய், சகோதரர் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர் அடித்துக் கொலை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரது தாய், சகோதரர் மற்றும் உறவினரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகேயுள்ள தச்சன்விளை பள்ளம்தட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (63). தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (58). இவர்களுக்கு 6 மகள்கள் மற்றும் முத்துக்குமார் (34) உள்ளிட்ட 2 மகன்கள். இவர்களில் 5 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. முத்துக்குமார் கூலி வேலைக்கு சென்றுவந்தார். முத்துக்குமாருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிறகு சிகிச்சை மேற்கொண்டதில் குணமானது. அதன்பிறகு, அவர் வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதை பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை முத்துக்குமார் வழக்கம்போல மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தாய் கிருஷ்ணவேணி, சகோதரர் சுயம்புலிங்கம் (24) மற்றும் சகோதரியின் கணவர் பெ. மாரியப்பன் (35) ஆகிய 3 பேரும் முத்துக்குமாரை சமாதானப்படுத்த முயன்றனர்.  ஆனால் அவர், தாய் உள்ளிட்ட 3 பேரையும் அவதூறாகப் பேசி தாக்கினாராம். மேலும், கிருஷ்ணவேனியின் கையை முத்துக்குமார் கடித்ததில் அவர் காயமடைந்தார்.
இதனால், ஆத்திரம் அடைந்த அவர்கள் கம்பால் தாக்கியதில் முத்துக்குமார் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்துக்குமார் திங்கள்கிழமை காலை உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக தட்டார்மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன், வழக்குப் பதிந்து முத்துக்குமாரின் தாய் கிருஷ்ணவேணி, சகோதரர் சுயம்புலிங்கம், உறவினர் மாரியப்பன் ஆகிய 3 பேரையும் தேடிவருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com