விளாத்திகுளத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விளாத்திகுளம் காமராஜர் நகரைச் சேர்ந்த கனிராஜ் மகன் ஜெயராஜ் (45), மிட்டாய் வியாபாரியான இவர் வெளியூர்களில் இருந்து மொத்தமாக பொருள்களை வாங்கி விளாத்திகுளம் கீழரத வீதியில் உள்ள ஒரு குடோனில் இருப்பு வைத்து சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தார்.
இவரது குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதயைடுத்து விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் செல்வகுமார் தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை இரவு குடோனில் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருள்கள் அடங்கிய சாக்கு மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து, ஜெயராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.