குளத்தூர் அருகே வைப்பாற்றில் சட்டவிரோதமாக ஆற்றுமணல் அள்ளிச் சென்ற 2 லாரிகள் மற்றும் ஒரு ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்த போலீஸார், மணல் திருட்டில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா உத்தரவின்படி, தனிப்படை உதவி ஆய்வாளர் ரென்னீஸ் தலைமையிலான போலீஸார் வைப்பாற்று படுகையோர கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளத்தூர் அருகே வைப்பாற்றில் சிலர் நள்ளிரவில் சட்டவிரோதமாக மணல் அள்ளிக்கொண்டிருந்ததைக் கண்டு, அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். மணல் அள்ளிய 2 லாரிகள் மற்றும் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், மணல் திருட்டில் ஈடுபட்டதாக நாகர்கோவிலை சேர்ந்த செல்வராஜ், ரெஜின், குமார், தூத்துக்குடியை சேர்ந்த பன்னீர்செல்வம், ஈஸ்வர், சங்கர், விஜய், குமார் ஆகிய 8 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக குளத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.