கோவில்பட்டி இல்லத்தார் நடுநிலைப் பள்ளியில் சுகாதாரம் மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மையான நிகழ்வுகள் என்ற தலைப்பில் தினமும் ஒவ்வொரு தூய்மை செயல்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இல்லத்தார் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு தூய்மையான நிகழ்வுகள் என்ற தலைப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சுகாதாரம் மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இப்பேரணிக்கு பள்ளித் தலைவர் சந்திரன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். பள்ளி முன்பிருந்து தொடங்கிய இப்பேரணி, கடலையூர் சாலை, பிரதான சாலை வழியாக பள்ளி வளாகம் வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து, சுகாதாரம் பேணுவோம், மழைநீரை சேகரிப்போம் என பள்ளி மாணவர், மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பேரணியில், பள்ளித் தலைமையாசிரியை இசக்கியம்மாள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.