திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வந்த 4 வயது குழந்தை அணிந்திருந்த 4 கிராம் தங்கச் சங்கிலியை திருடிய பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணம் மடோனா தெருவைச் சேர்ந்தவர் சேதுராமலிங்கம் மகன் ராஜாராம் (35). கேரளத்தில் சலூன் வைத்துள்ளார். ராஜாராம், அவரது மனைவி பேச்சியம்மாள், மாமியார் லட்சுமி மற்றும் 4 வயது குழந்தை சேதுலட்சமி ஆகியோருடன் கடந்த 9-ம் தேதி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதியம் சுவாமி தரிசனம் செய்தார். பிறகு, ராஜாராம் குடும்பத்தினர் தங்க கொடிமரம் அருகே வந்தபோது குழந்தை சேதுலட்சுமி அணிந்திருந்த 4 கிராம் தங்கச் சங்கிலி திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜாராம் செவ்வாய்க்கிழமை திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் பெண் ஒருவர் குழந்தை அணிந்திருந்த சங்கிலியை பறித்ததும், அவர் ஆறுமுகனேரி பாரதிநகர் நடராஜர் தெருவைச் சேர்ந்த முத்தையா மனைவி பலவேசம் (54) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.