மக்களவைத் தேர்தல் மற்றும் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள மாணவர், மாணவிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சனிக்கிழமை தேரோட்டம், ஞாயிற்றுக்கிழமை தீர்த்தவாரி, திங்கள்கிழமை தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது. மேலும், மக்களவைத் தேர்தல் இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, கோவில்பட்டி சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட 281 வாக்குச் சாவடி மையப் பணிகள், 3 நாள்கள் கோயில் திருவிழா பாதுகாப்புப் பணி ஆகியவற்றில் ஈடுபட உள்ள தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணித் திட்ட மாணவர், மாணவிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் லட்சுமி மஹாலில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ் தலைமை வகித்து, இரு நிகழ்வுகளிலும் மாணவர்- மாணவிகள் பணியில் எவ்வாறு பணியாற்ற வேண்டும்? என்பது குறித்து அறிவுரை வழங்கி, அவர்களைப் பாராட்டினார்.
இதில், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, நாட்டு நலப் ணித் திட்ட மற்றும் தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர்கள் குமாரமுருகன், சத்தியமூர்த்தி(இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக்), மகேஷ்குமார்(கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி), செல்வராஜ்(எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி), சிவக்குமார், தம்பா(நேஷனல் பொறியியல் கல்லூரி) மற்றும் இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, நேஷனல் பொறியியல் கல்லூரி, எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியைச் சேர்ந்த நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படையினர் கலந்து கொண்டனர்.