சாத்தான்குளம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 22 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.
சாத்தான்குளம் அருகேயுள்ள ராஜமன்னார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டி மனைவி சிவசக்தி (48). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜீவன்ராஜ் என்பவருக்கும் இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், ஜீவன்ராஜ், மோகன்ராஜ், முருகராஜ் உள்ளிட்டோர் பிரச்னைக்குரிய இடத்தில் திங்கள்கிழமை நுழைந்துள்ளனர். இதை கண்டித்த சிவசக்தியை அவர்கள் அவதூறாக பேசி, தாக்கியதுடன் கொலைமிரட்டல் விடுத்தனராம். தாக்குதலில் காயமடைந்த சிவசக்தி சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில், தட்டார்மடம் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தி, ஜீவன்ராஜ், மோகன்ராஜ், முருகராஜ், ரவிச்சந்திரன் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்தார்.