கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தக மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா முன்னிலையில், செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் சங்கர், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் பொருள்காட்சியை திறந்து வைத்து, அனைத்து அரங்குகளையும் பார்வையிட்டனர்.
இதில், செய்தி மக்கள் தொடர்புத் துறை, காவல் துறை, போக்குவரத்து துறை, இந்து சமய அறநிலையத்துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட 27 அரசுத் துறை அரங்குகள் மற்றும் அரசு சார்ந்துள்ள துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள், பல்வேறு வகையான உணவுப் பொருள்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள், பல்வேறு வகையான ராட்டினங்கள் இடம் பெற்றுள்ளன. இப்பொருள்காட்சி சனிக்கிழமை (ஏப் 20) முதல் 45 நாள்களுக்கு தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர் (கள விளம்பரம்) சரவணன், செய்தி மக்கள் தொடர்புத் துறை பொருள்காட்சி பிரிவு கணக்கு அலுவலர் வெங்கட், கோட்டாட்சியர் அமுதா, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தனபதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொருள்காட்சி பிரிவு) கார்கி, தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகேசன், கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் போஸ்கோராஜா, வட்டாட்சியர் பரமசிவன், காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ், நகராட்சி ஆணையர் அச்சையா, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முருகானந்தம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் (பொ) செந்தூர்பாண்டி, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி கோட்டப் பொறியாளர் ராஜு, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரோஜாலிசுமதா, கோயில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணிராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.