விளாத்திகுளம் அருகேயுள்ள வாதலக்கரை முத்துசாமி இந்து தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளாத்திகுளம் பகுதியில் 1894இல் ச. முத்துசாமி பிள்ளை என்பவர் திண்ணை பள்ளியாக 4 மாணவர்களுடன் இப்பள்ளியைத் தொடங்கினார். 125 ஆண்டுகளாக அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியாக இயங்கி வரும் இப்பள்ளியில், தற்போது சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 33 மாணவ- மாணவியர் படிக்கின்றனர். 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
125ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் இந்தத் தருணத்தில் பள்ளியை மறு சீரமைப்பு செய்து, கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகி எம்.எஸ். சேகர் கூறியது: வாதலக்கரை கிராமத்தைச் சுற்றி 3 கி.மீ. தொலைவுக்கு எந்த அரசுப் பள்ளியும் இல்லாத நிலையில், ஆரம்ப கல்விக்காக மாணவ- மாணவிகளை இங்கு சேர்ப்பதற்கு பெற்றோர் வருகின்றனர். ஆனால், போதிய வகுப்பறை கட்டடம் இல்லாததால் தனியார் பள்ளிகளை நாடிச் செல்கின்றனர். எனவே, இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்களை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.
தலைமையாசிரியர் கவிதா கூறியது: பள்ளிக்குத் தேவையான கணினி, பிரிண்டர், பாடத்திட்டம் தொடர்பான கல்வி உபகரணங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஆகியவற்றுக்காக உதவிகளை எதிர்பார்க்கிறோம். கூடுதல் வகுப்பறைகளும், சுகாதார வளாகமும் அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.