தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நிலவும் குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலர் இரா. ஹென்றி தாமஸ் தலைமையில் அக்கட்சியினர் புதன்கிழமை மாநகராட்சி ஆணையர் வீ.ப. ஜெயசீலனை சந்தித்து அளித்த மனு விவரம்: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நிலவி வரும் குடிநீர்த் தட்டுப்பட்டை முடிவுக்கு கொண்டு வந்து 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்த்தப்பட்ட சொத்துவரி, குடிநீர்க் கட்டணம் ஆகியவற்றை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகரப் பகுதியில் மிகவும் மோசமான நிலையில் காணப்படும் சாலைகளை சீரமைக்கும் பொருட்டு, புதிதாக தார்ச் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகளில் இருந்து உரம் தயார் செய்து விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் ஏ.பி.ஆர். அந்தோணி கிரேஸ், நிர்வாகிகள் சண்முககுமாரி, செல்வம், செல்வராஜ், காசிலிங்கம், ஷேக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.