தூத்துக்குடி அருகே அரசுப் பேருந்தை சேதப்படுத்தி ஓட்டுநரை தாக்கிய வழக்கில், 2 இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி அருகேயுள்ள கீழகூட்டுடன்காடு சந்திப்பு பகுதியில் 28.9.14இல் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்தை கல்லால் சேதப்படுத்தி, ஓட்டுநர் முருகனை சிலர் தாக்கினர். இதுகுறித்து அவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்குத் தொடர்பாக புதுக்கோட்டை பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த அய்யப்பராஜ் (23), அய்யனார் காலனியைச் சேர்ந்த லட்சுமணன் (24) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை நீதிபதி கெளதமன் விசாரித்து, அய்யப்பராஜுக்கும், லட்சுமணனுக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ. 1,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.