தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே வழக்குரைஞர் கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் கல்லூரி மாணவர் கோவில்பட்டி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.
ஸ்ரீவைகுண்டம், முறப்பநாடு அருகேயுள்ள சென்னல்பட்டியில் வழக்குரைஞர் வேல்முருகன் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில், தொடர்புடையதாகக் கூறப்படும் சென்னல்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த பிச்சையா மகன் அருண்ராஜ் (19) கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றம் எண் 1இல் புதன்கிழமை சரணடைந்தார். வழக்கை குற்றவியல் நீதிமன்ற எண் 1இன் நடுவர் (பொறுப்பு) மாவட்ட உரிமையியல் நீதிபதி முரளிதரன் விசாரித்து, அருண்ராஜை இம்மாதம் 27ஆம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவிட்டார். அதையடுத்து, அருண்ராஜ் தூத்துக்குடி அருகேயுள்ள பேராவூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள கல்லூரியில், பி.ஏ. பொருளியல் பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.