சாத்தான்குளம் அருகே கோயிலில் நகை மற்றும் பணம் திருடி தீ வைத்த இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
சாத்தான்குளம் அருகேயுள்ள அறிவான்மொழியில் அடுத்தடுத்து பெருமாள் கோயில், இசக்கியம்மன் கோயில்கள் உள்ளன.
வியாழக்கிழமை இரவு பெருமாள் கோயில் பூட்டை உடைத்து உள்ளே சென்று சுவாமி கையில் அணிந்திருந்த தங்க காப்பு மற்றும் இசக்கியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவர், கோயில் மேற்கூரைக்கு தீ வைத்து சென்றதாக கூறப்படுகிறது. கோயிலில் தீ பற்றி எரிவதை பார்த்த பொதுமக்கள் தீயை அணைத்தனர். கோயில் தர்மகர்த்தா ச. லிங்கதுரை அளித்த புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கோயிலுக்கு வந்த விசாரணை நடத்தினார். இதில், திருட்டில் ஈடுபட்டது அறிவான்மொழி தெற்குத் தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் மதியழகன் (27) என்பது தெரியவந்தது. வழக்குப் பதிந்து சாத்தான்குளம் போலீஸார் மதியழகனை கைது செய்தனர். அவரிடம் இருந்த நகை, மற்றும் உண்டியல் பணம் ரூ. 3,020 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.