விநாயகர் சதுர்ச்சியை முன்னிட்டு அன்றைய தினம் மதுக் கடைகளை மூட வேண்டும் என இந்து மகா சபா வலியுறுத்தியுள்ளது.
சாத்தான்குளத்தில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட இந்து மகாசபா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ராம்குமார் முன்னிலை வகித்தார். அமைப்பின் மாநிலச் செயலர் உடன்குடி ஐயப்பன் பங்கேற்றுப் பேசினார். மாவட்டச் செயலர்கள் ரவிச்சந்திரன், இசக்கிமுத்து, சாத்தான்குளம் ஒன்றியத் தலைவர் மாரிமுத்து, ஒன்றிய பொதுச்செயலர் முண்டசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் , உடன்குடி, ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர் ஒன்றியங்களில் 1 அடி முதல் 12 அடி வரை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வைக்க வேண்டும்; 500 வீடுகளில் 1 அடி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு செப். 3 ஆம்தேதி சிலைகளையும் உடன்குடியில் இருந்து ஊர்வலமாக சென்று குலசேகரன்பட்டினம் கடலில் விசர்ஜனம் செய்ய வேண்டும்;
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிராமங்களில் கோலப் போட்டி, விநாயகர் அகவல் போட்டி, விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும்; விநாயகர் சதுர்த்தியை அன்றைய தினம் மதுபானக் கடைகள் மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் மோகன் வரவேற்றார். ஒன்றியச் செயலர் நித்திய ஆனந்த் நன்றி கூறினார்.