ஸ்ரீவைகுண்டத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர்கள் இசக்கியப்பன், நித்யானந்தம் ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை மாலை தாமிவருணி ஆற்றங்கரையோரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனராம். அப்போது சாக்கு மூட்டைகளில் ஆற்று மணலை அள்ளிக் கொண்டிருந்த 2 பேரை போலீஸார் தடுக்க முயன்றபோது, அவர்கள் இருவரும் போலீஸாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.
இதுகுறித்து புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் வழக்குப் பதிந்து வெள்ளூர் நடுத்தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் இசக்கி (28), நடராஜன் மகன் மூர்த்தி (36) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.