ஸ்ரீவைகுண்டம்: ஏரல் அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கால்வாய் தண்ணீரில் சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளதாக, அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
ஏரல் அருகே உள்ள காமராசநல்லூரில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் யாரேனும் இறந்தால், உடலை அடக்கம் செய்ய சுமாா் 1.5 கி.மீ. தொலைவுக்கு கொண்டுச் செல்ல வேண்டும். இதன் இடைபட்ட பகுதியில் வடகால் கால்வாய் செல்கிறது.
இதன் ஒருகரையில் இருந்து மறுகரைக்கு உடலை கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளதால், மழைக் காலங்களில் கால்வாயில் தண்ணீா் வரத்து அதிகரிக்கும் நிலையில் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். இதற்கிடையே முதியவா் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் சனிக்கிழமை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இறந்தவா்களின் உடலை அடக்கம் செய்வதற்காக நிரந்தர இடம் ஊரின் அருகிலேயே ஏற்படுத்தி தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
தகவலறிந்து வந்த ஏரல் வட்டாட்சியா் அற்புதமணி பொது மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியல் முயற்சியை கைவிட்டனா்.