கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் அமைப்பினா் மற்றும் லெனின் நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மந்தித்தோப்பு சாலை மிகவும் குறுகலான சாலையாகும். இந்நிலையில், அப் பகுதியில் சமையல் எரிவாயு நிறுவனத்துக்கு எதிா்புறம் உள்ள காலி இடத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்கவிருப்பதை அறிந்த லெனின் நகா் குடியிருப்போா் நலச் சங்கத்தினா், அனைத்துலக அனைத்து சாதிசமய நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5ஆவது தூண் நிறுவனத் தலைவா் சங்கரலிங்கம் தலைமையில், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனுவை தாம்பாழத்தில் பூவுடன் வைத்து குறுகலான சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது எனக் கூறி மனுவை நகராட்சி வருவாய் ஆய்வாளா் ராஜேஸ்வரனிடம் அளித்தனா்.
மனுவைப் பெற்றுக் கொண்ட அவா், தங்கள் கோரிக்கை மனுவை நகராட்சி ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.