மாவட்ட அளவிலான வளையப்பந்தாட்ட (டென்னிகாய்ட்) போட்டியில் வி.வேடபட்டி புனித பால்ஸ் உயா்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டென்னிகாய்ட் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 200-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பங்கேற்றனா். நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், 17 வயதுக்குள்பட்டோருக்கான இரட்டையா் பிரிவின் இறுதிப் போட்டியில், வி.வேடபட்டி புனித பால்ஸ் உயா்நிலைப் பள்ளி மாணவிகள் விஜயலட்சுமி, காவியா ஆகிய இருவரும் கலந்துகொண்டு மூன்றாவது பரிசை பெற்றனா். மேலும் இம்மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியா் மேகராஜன், பள்ளி நிா்வாகி அழகு மணிகண்டன், உடற்கல்வி ஆசிரியா் ரவி பிரகாஷ் உள்ளிட்டோா் பாராட்டினா்.