பேய்க்குளத்தில் கடந்த 2மாதங்களாக அறுந்து விழுந்த மின் வயர் சீரமைக்கப்படாமல் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் இருந்து முனைஞ்சிப்பட்டி செல்லும் சாலையோரம் அப்பகுதியில் உள்ள விவசாய நிலம் மற்றும் தோட்டங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கும் மின் வயர்கள் செல்கிறது. கடந்த டிசம்பர் மாதம் சாலையில் வேகமாக சென்ற வாகனம் இழுத்து சென்றதில் மின் வயர் அறுந்து விழுந்து மின் பாதிப்பை ஏற்படுத்தியது.
தகவலறிந்து வந்த மின்வாரிய அலுவலர்கள் அறுந்து விழுந்த மின் வயரை அருகில் உள்ள மைல் கல்லில் கட்டி வைத்து விட்டு அதில் வரும் மின் இணைப்பை துண்டித்து சென்றனர். ஆனால் 2 மாதங்கள் ஆகியும் மைல் கல்லில் கட்டி வைக்கப்பட்ட மின்வயர் சீரமைக்கப்படாமல் காட்சிப்பொருளாக காணப்படுகிறது.
மேலும் இதில் இருந்து மின்சாரம் பெறும் விவசாய நிலங்களுக்கு இணைப்பு வழங்கப்படாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே, உயர் அதிகாரிகள் பார்வையிட்டு மின் வயரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.