கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலில் முன்னாள் தலைவர் அன்புராஜ் அணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த சங்கத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்தல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. எனினும், நீதிமன்ற உத்தரவால் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையை நடத்தலாம் என கடந்த 2 ஆம் தேதி நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, பாண்டவர்மங்கலம் சமுதாய நலக் கூடத்தில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், பலத்த பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில், பதிவான 464 வாக்குகளில் 24 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஏற்கெனவே தலைவராக இருந்த அன்புராஜ் தலைமையிலான சுப்புத்தாய், சூசைமாணிக்கம், முத்துகுமார், சுந்தரபாண்டியன், ராமசாமி, தங்கராஜ், சண்முகசாமி ஆகிய 8 பேர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். ஏற்கெனவே, மகளிர் அணியைச் சேர்ந்த 3 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டுறவு சார் பதிவாளர்கள் தமிழ்ச்செல்வன், முருகவேல், செண்பகவல்லி ஆகியோர் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டனர். முன்னதாக, வாக்குப் பெட்டி நகர கூட்டுறவு வங்கியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாண்டவர்மங்கலம் சமுதாய நல கூடத்திற்கு கொண்டுவரப்பட்டது.