சாத்தான்குளம் டி.எஸ்.பி.யை கண்டித்து அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா பிறந்ததினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் காவல்துறை, பேரூராட்சியில் அனுமதிபெற்று சாத்தான்குளம்
பஜாரில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. சாத்தான்குளம் டி.எஸ்.பி. பாலச்சந்திரன், அதிமுக நிர்வாகிகளை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு விளம்பரப் பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தாராம்.
இதையடுத்து, விளம்பரப் பதாதைகள் அகற்றப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ஜெயலலிதா பிறந்ததினத்தையொட்டி, அங்கு வந்த அதிமுகவினர், ஒன்றியச் செயலர் அச்சம்பாடு த. சவுந்திரபாண்டி தலைமையில், புதிய பேருந்து நிலையம் முன்பு டி.எஸ்.பி. நடவடிக்கையை கண்டித்து மறியல் போராட்டம் நடத்த திரண்டனர்.
தகவலறிந்த, காவல் உதவிஆய்வாளர் ர. சிலுவை அந்தோணி தலைமையில் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மீண்டும் விளம்பரப் பதாதைகள் வைத்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டதை அடுத்து அதிமுகவினர் கலைந்து சென்றனர்.